×

மே 6ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்: மே 10ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6 மற்றும் 10ம் தேதிகளில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் 7534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மேனிலைப் பள்ளிகளில் பிளஸ்2 வகுப்புகளில் படிக்கின்ற மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடந்தது.

இந்த தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவ மாணவியர் எழுதினர். இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21875 பேரும் எழுதினர். பிளஸ் 2 தேர்வுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தவிர சிறைவாசிகள் 125 பேர் தேர்வில் பங்கேற்றனர். சென்னை நகரில் 405 மேனிலைப் பள்ளிகளை சேர்ந்த 45 ஆயிரம் மாணவ மாணவியர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அவர்களுக்காக சென்னை நகரில் மட்டும் 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12616 பள்ளிகளை சேர்ந்த 9,10,024 மாணவ மாணவியர் எழுதினர். இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 28827 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்றனர். சிறைவாசிகள் 235 பேரும் எழுதினர். அதன் தொடர்ச்சியாக 118 விடைத்தாள் சேகரிப்பு மையங்களுடன், பிளஸ்2 தேர்வுக்கு 83, பத்தாம் வகுப்புக்கு 88 மையங்களில் விடைத்தாள் திருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தன. அதற்கு பிறகு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதே போல பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்துள்ள நிலையில் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ளன.

பொதுத் தேர்வுகள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்ட போது, மே 6ம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை தயார் நிலையில் உள்ளது. திட்டமிட்டபடி மேற்கண்ட தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

* தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் 21,875 பேரும் எழுதினர்.

* தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 9,10,024 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். தனி தேர்வர்களாக 28,827 பேரும், சிறைவாசிகள் 235 பேரும் எழுதினர்.

* பிளஸ் 2 தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தவிர சிறைவாசிகள் 125 பேரும் பங்கேற்றனர்.

* சென்னை நகரில் 45 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களுக்காக 180 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

* விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்தன.

The post மே 6ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்: மே 10ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், பள்ளி கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணி தீவிரம்